Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் விற்பனை ஜோர்

*கார்த்திகையிலும் குறையாத கூட்டம்

மதுரை : மதுரை, மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில், கார்த்திகை மாதம் என்றாலும் மக்கள் கூட்டத்திற்கு குறைவின்றி இருந்ததால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் பின்புறம், மொத்த விலைக்கான மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து, அதிக அளவில் கடல் மீன்கள் வந்து சேர்கின்றன. இதேபோல் கேரளாவில் இருந்தும், பல்வேறு வகையான கடல் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆந்திராவில் இருந்து கண்மாய்களில் வளர்க்கப்படும் மீன்களும் அதிகம் வந்து சேர்கின்றன.

இதன்படி கடலில் பிடிக்கப்படும் நண்டுகள், இறால் ரகங்கள் மற்றும் மீன் வகைகளில் நெத்திலி, சங்கரா, வெள்ளை கிழங்கான், விளைமீன், செந்நகரை, கருநகரை, கட்டிக்காளை, ஊளி, மாவுலா, சில்வர் முரல், களிங்க முரல், காளை, மத்தி, காரப்பொடி, பண்ணா, சூம்பாறை, மஞ்சப்பாறை, முட்டப்பாறை, கொடுவா, வஞ்சிரம், சுறா, கடல் கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் டன் கணக்கில் வந்து சேர்கின்றன. இதேபோல் ஆந்திராவில் இருந்து கண்மாய் மீன்களான ஏரிவாவல், பாப்பு, பங்காஸ் உள்ளிட்டவை அதிகம் வருகின்றன.

இவற்றை தினந்தோறும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்து செல்கின்றனர். இங்கு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை மட்டும், பொதுமக்களுக்கு சில்லறையாக மீன்கள் விற்பனை ெசய்யப்படும். இதனால் தங்களுக்கு பிடித்தமான வகை மீன்களை விலை குறைவாக வாங்க விரும்பும் ஏராளமானோர், இங்கு வந்து செல்வர்.

இந்நிலையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமானோர் கோயில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இருப்பினும் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவின்றி காணப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை அவர் பல்வேறு வகையான மீன்களை வாங்கிச்சென்றனர்.