Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று சந்திர கிரகணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும்; வெறும் கண்களால் பார்க்கலாம்

சென்னை: சந்திரகிரகணம் இன்று துவங்குகிறது, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சூரியன், பூமி, சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில் பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என அழைக்கப்படுகிறது. நிலவு முழுமையாக பூமியின் நிழல் பகுதியில் மறைவது, முழு சந்திர கிரகணமாகும். இன்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது நாடு முழுதும் தெரியும். இது குறித்து சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: இன்று நிகழ உள்ள சந்திர கிரகணம், 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். இதை கண்களால் பார்ப்பது கடினமாக இருக்கும். பின்னர் 9.57க்கு பகுதி கிரகணமாக துவங்கும்.

அப்போது, சந்திரன் இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அந்த கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். இரவு 11.01 முதல் நள்ளிரவு 12.33 மணி வரை, சந்திரன் முழுமையாக மறையும். அதிகாலை 1.26 மணிக்கு, சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ேமலும் வழக்கமாக கிரகண நேரங்களில் அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த சந்திர கிரகணம் இரவு நேரத்திலேயே நடைபெறுவதாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோள்விகளில் செப்டம்பர் 7ம் தேதி பகல் 1 மணியில் இருந்தே கோவில் நடை சாத்தப்பட்டு விடும். மீண்டும் 8ம் தேதி அதிகாலை கிரகண சாந்தி பூஜை முடிந்த பிறகு, வழக்கமான பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், சந்திர கிரகணத்தை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.