சென்னை: திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசை காவியம் படைத்துள்ள இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலக பொதுமறையான திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசை காவியம் படைத்துள்ள உடன்பிறப்புகள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன்.
இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும். குறளிசை காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.