குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 15க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை குன்னூர் நகராட்சியினர் அகற்றினர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வரும் சம்பவத்தால் பாதசாரிகள் குறுகலான பாதையில் நடக்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருவதாக குன்னூர் நகராட்சியினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
அதன் அடிப்படையில் கடந்த மூன்று மாத காலமாக நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சியினர் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வந்தனர்.
மேலும் வியாபாரிகளுக்கு அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நகராட்சியினர் முதற்கட்டமாக நேற்று சிம்ஸ் பூங்கா நுழைவாயில் பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தள்ளுவண்டி மூலம் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் முறையாக நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஓரிரு நாட்களில் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள மற்ற ஆக்கிரப்பு கடைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தெரிவித்துள்ளார்.