Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்; மேட்டூர் அணையிலிருந்து 65,000 கனஅடி நீர்திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு 42,994 கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவும், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 55,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 65,000 கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை விநாடிக்கு 55,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு நண்பகல் 12 மணிக்கு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக விநாடிக்கு 42,700 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது. காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேட்டூர் அணையின் இருகரைகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்திறப்பு அதிகரிப்பால் பூலாம்பட்டி காவிரியாற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 32,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11 மணிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு புதுவெள்ளம் பொங்கி பாய்ந்து செல்கிறது. அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் நேற்று 4வது நாளாக தடை நீடித்தது. நடைபாதையில் 2 அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் மெயின் அருவிக்கு செல்லும் கேட் மூடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.