Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாணார்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: கயிறு கட்டி கடக்கும் கிராம மக்கள், சிறுவர்கள்

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் ஆபத்தை உணராமல் கயிறு கட்டி ஆற்றை கடந்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எஸ்.கொடை கொம்புக்காரபாளையம். சிறுமலை அடிவாரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. சிறுலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு இந்த கிராமத்தின் அருகே கடந்து செல்கிறது. இந்த ஆற்றை கடந்துதான் கிராம மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். மாணவர்களும் ஆற்றை கடந்துதான் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும்.

மழைக்காலத்தில் இந்த ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும்போது கிராம மக்கள் ஆபத்தான வகையில் ஆற்றை கடந்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சிறுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், கிராம மக்கள், மாணவர்கள் கயிறு கட்டி ஆபத்தான வகையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: அத்தியாவசிய தேவைக்கு நாங்கள் திறுமணிமுத்தாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிகளவில் செல்லும்.அதன்படி தற்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இருப்பினும் பாலம் வசதி இல்லாததால் கயிறு கட்டி கடந்து வருகிறோம். எனவே, கிராம மக்கள் நலன்கருதி ஆற்றில் பாலம் கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.