திண்டுக்கல்: நமது வாக்குரிமையை நீக்கினால், ஏன் நீக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள் என பிரேமலதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அளித்த போட்டி: தேமுதிக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும். இது எங்களின் நம்பிக்கை. எஸ்ஐஆர் குறித்து தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகிறது. வாக்குகள் திருடப்படுகிறது. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகிறது போன்ற பல்வேறு கருத்துகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். நமது வாக்குரிமையை யார் பறிக்க முடியும்? வாக்குரிமையை ஏன் நீக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள். யாரும் யாருடைய வாக்குகளையும் நீக்க முடியாது. ஆதார் தான் நமது அடையாளம் என்றால், வாக்குரிமையும் நமது அடையாளம். கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம். தேமுதிக அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
* உதயகுமாருடன் சந்திப்பு ஏன்?
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, ‘‘உதயகுமார் தாயார் இறந்தபோது அஞ்சலி செலுத்தும்விதமாக அவரை சந்தித்தேன். அந்த வகையில் என்னுடைய தாயார் இறந்ததற்கு என்னை மதுரையில் சந்தித்து பேசினார். இது நட்புரீதியான சந்திப்பு’’ என்றார். ‘‘தவெக கட்சித் தலைவர் விஜய் வருகை திமுக, அதிமுக என எந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்ற கேள்விக்கு, ‘நோ கமெண்ட்ஸ்’ என பதிலளித்து விட்டு,‘‘மற்ற கட்சிகளை உயர்த்தும் கட்சி நாங்கள் இல்லை. இதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்’’ என்றார்.


