Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்துக்கு எதிராக ஒன்றிய அரசு, அழிவு பாதையில் அதிமுக மக்களிடம் எடுத்து சொல்ல பொதுக்கூட்டம் நடத்துங்கள்: கட்சியினருக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசின் செயல்பாடுகள், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்ட பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுகவை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்ஜிஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்

கொள்கிறேன்.

மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப தக்க நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.