சென்னை: ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா சந்தித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘தமிழக முதல்வரிடம் நலம் விசாரித்தேன், மருத்துவரிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்’’ என்றார்.
அப்போது, ‘உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்ற வார்த்தையை அவரிடம் நீங்கள் கூறியதாக சொல்கிறார்கள்’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அதை நீங்கள் தான் கூறுகிறீர்கள் என்று நூறு தடவை கூறுவேன்’ என்றார். மேலும், ‘தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளீர்கள் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றம் இருக்குமா’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘தமிழக முதல்வருக்கு உடல் நிலை சரியில்லை, சாதாரணமானது தான். உடல்நலம் குறித்து விசாரிப்பது வழக்கம். அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை’ என்றார்.
அன்புமணியின் வீட்டு முகவரிதான், பாமக தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்றபோது, ‘ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்பதைப்போல் தைலாபுரம் தோட்டம் தான் பாமகவின் தலைமையகம். வரும் 17ம் தேதி பொதுக்குழு நடைபெறும்’ என்றார். பொதுக்குழுவிற்கு அன்புமணிக்கு அழைப்பு உண்டா என்றபோது, ‘உரியவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும்’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.