Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை: வைகோ பேட்டி

மீனம்பாக்கம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக நேற்றிரவு சென்னை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மதிமுக தனது கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ள, தமிழகத்தில் கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து அமைத்துள்ளோம். இந்தாண்டு திருச்சியில் அண்ணா பிறந்த நாளை பிரமாண்ட மாநில மாநாடாக நடத்துவதற்கு மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தை கபளீகரம் செய்துவிடலாம் என இந்துத்வா சக்திகள், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவினர் கருதி, இங்கு காலூன்ற முயற்சிக்கின்றனர். திராவிட இயக்க பூமியான இங்கு அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகும். வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இதில் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். இங்கு கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு திமுக தனியாக அரசு அமைக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் எனது கடமையை செய்து, குட்பை சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

முக்கிய பிரச்னைகளில் தமிழகத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருசிலரை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கிறது. இதை கண்டித்து, தூத்துக்குடியில் பொதுக்கூட்டம், முல்லை-பெரியாறு அணைக்காக கம்பத்தில் ஒரு கூட்டம், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க திருப்பூரில் கூட்டம், காவிரி குறித்து குடந்தை, திண்டுக்கல்லில் கூட்டம். சென்னையில் 2 இடங்கள் என மதிமுக சார்பில் 7 இடங்களில் கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமியைவிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லுமிடங்களில் எல்லாம் அதிகளவு கூட்டம் வருகிறது. தமிழக மக்கள் திராவிடத்தை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது. இந்த கூட்டணி கட்சித் தலைவர்களின் மத்தியில் எவ்வித சலனத்துக்கும் சஞ்சலத்துக்கும் துளியளவு எண்ணம்கூட கிடையாது. இவ்வாறு வைகோ கூறினார்.