Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் ஓபிஎஸ் கேட்டால் பிரதமரை கண்டிப்பாக சந்திக்க வைப்போம்: ஐஸ் வைக்கும் நயினார்

அவனியாபுரம்: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ் கேட்டால் பிரதமரை கண்டிப்பாக சந்திக்க வைப்போம் என நயினார் நாகேந்திரன் திடீர் ஐஸ் வைத்து உள்ளார். தென்மாவட்ட பாஜ பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், மதுரை சிந்தாமணி பகுதியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஓபிஎஸ் உடன் ஏற்கனவே நான் செல்போன் மூலம் பேசிக் கொண்டு தான் இருந்தேன். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என்ற அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு வரை ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனிடம் போனில் பேசிக் கொண்டு தான் இருந்தேன். எந்த முடிவும் எடுக்காதீர்கள் என கூறியிருந்தேன். இருந்தாலும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் வெளியேறியது சொந்த பிரச்னையா அல்லது அவருக்கு வேறு எதுவும் காரணமா என்பது தெரியவில்லை. மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கி தந்திருப்பேன்.

இபிஎஸ் அழுத்தத்தால் தான் ஓபிஎஸ் வெளியேறினாரா என்று கேட்கிறீர்கள். அப்படி ஒன்றும் இல்லை. ஓபிஎஸ் என்டிஏவில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுத்திருப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இது எங்கள் அணிக்கு பலவீனமா, இல்லையா என்பது தேர்தலில் தான் தெரியவரும். முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது தொகுதி பிரச்னைக்காக கூட இருக்கலாம். தனிப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம். அவர் அறிவிப்பு வெளியிடும் வரை என்னவென்று கருத்து சொல்ல முடியாது. வரும் 26ம் தேதி மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம். இவ்வாறு கூறினார்.