Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உபியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த எழுத்து பிழையால் 22 நாள் சிறை 17 ஆண்டு போராடி விடுதலையான முதியவர்

மெயின்புரி: காவல்துறை அதிகாரியின் அலட்சியத்தால் எழுத்து பிழை காரணமாக குற்றம் எதுவும் செய்யாத ஒருவர் 22 நாட்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். ஆனாலும் நீதிக்காக 17 ஆண்டுகள் போராடியுள்ளார். உபி மாநிலம் மெயின்புரியை சேர்ந்தவர் ராஜ்வீர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒரு கலவர வழக்கில், ராஜ் வீர் என்பவர் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஆனால் இதில் உண்மையான குற்றவாளி ராஜ் வீர் இல்லை. இவரின் சகோதரர் ராம் வீர். அப்போதைய கோட்வாலி இன்ஸ்பெக்டர் சிவசாகர் தீட்சித் செய்த எழுத்து பிழையினால் ராஜ் வீரின் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது. ராஜ் வீர் 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் தனது வழக்கறிஞர் மூலம் ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை.

போலீசார் பொய்யான வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் வழக்கு ஆக்ராவில் இருந்து மெயின்புரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக 300 முறை நீதிமன்றங்களில் நடந்த விசாரணையில் ஆஜராகியுள்ளார். ராஜ்வீரின் வழக்கறிஞர் வினோத் குமார் யாதவ்,‘‘இப்படி தொடர்ந்து நீதிமன்ற வழக்கு என அலைந்து கொண்டிருந்ததால் ராஜ்வீரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 17 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பின்னர் கடந்த 24ம் தேதி வழக்கை விசாரித்த மாவட்ட சிறப்பு நீதிபதி ஸ்வபன் தீப் சிங்கால், ராஜ் வீர் நிரபராதி என்றும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போடப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இதில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது 62 வயதாகும் ராஜ்வீருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகன் உள்ளனர்.