Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெலங்கானாவில் 13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் கட்டாய திருமணம்: தாய், கணவன் உள்பட 4 பேர் கைது

திருமலை: தெலங்கானாவில் 13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

அவரது 13வயது மகள் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையால் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடுவுடன் கடந்த மே மாதம் 28ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இந்த திருமணத்தை விரும்பாத சிறுமி, தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையேற்றுக்கொண்டு அவரை கடந்த வாரம் முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு சென்ற மாணவி, தனது ஆசிரியர்களிடம் கதறி அழுதபடி தனக்கு திருமணம் ஆனதை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிறுமியிடம் புகாரை பெற்ற போலீசார், சிறுமியின் தாய், கணவன் ஸ்ரீநிவாஸ் கவுடு, புரோக்கர் மற்றும் திருமணத்தை நடத்திய புரோகிதர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.