Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாங்க முடியாத வலியை அனுபவிப்பதால் கருணை கொலைக்கு அனுமதி கோரும் ஆசிரியை: குடியரசுத் தலைவருக்கு உருக்கமான கடிதம்

புதுடெல்லி: தாங்க முடியாத வலியை அனுபவிப்பதால் தன்னை கருணை கொலைக்கு அனுமதி கோரி மத்திய பிரதேச ஆசிரியை ஒருவர் குடியரசுத் தலைவருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை குமாரி சந்திரகாந்தா ஜெதானி, பல ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே தனது உடல்நிலை மோசமடைந்ததற்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டுகிறார். தவறான மருந்துகள் வழங்கப்பட்டதால், தனது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியதாக அவர் கூறுகிறார். பின்னர், ஓர் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோதும், அங்கும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததால், தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார். தற்போது, தனது உடல் வலியின் காரணமாக, கருணைக் கொலைக்கு அனுமதிக்குமாறு கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘சக்கர நாற்காலியில் இருந்தபடியே, எனது வாழ்வாதாரத்திற்காக தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு இருப்பதால் தாங்க முடியாத உடல் வலியை அனுபவிக்கிறேன். அதிகாரிகளிடமிருந்து எனக்குத் தேவையான உதவியோ, ஆதரவோ கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்தபோதும், சமூகத்தின் மீது அவர் கொண்ட அக்கறை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக எழுதி வைத்துள்ளார். மேலும், தனது மரணத்திற்குப் பிறகு, உடல் உறுப்புகளைத் தானம் செய்யவும், தனது உடலை மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.