மும்பை: சமீபத்தில் வீடியோ வெளியிட்டு கதறிய தனுஸ்ரீ தத்தா, நடிகர் சுஷாந்த் மரணத்துடன் ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்வதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் ‘மீடூ’ இயக்கத்திற்கு வித்திட்ட முக்கிய நபர்களில் ஒருவராவார். அப்போது அவர், பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பாலிவுட்டின் இருண்ட பக்கத்தை தைரியமாக வெளிக்கொண்டு வந்த அவரது குற்றச்சாட்டுகள், நாடு தழுவிய விவாதத்தை உண்டாக்கின.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் திரையுலகிலிருந்து பெருமளவில் விலகி இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக எனது வீட்டில் தொடர் துன்புறுத்தல்களையும், உயிருக்கு அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன் என்று கூறி உதவி கோரினார். இந்த வீடியோவை ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ (விளம்பரத்திற்காக) என சிலர் விமர்சித்த நிலையில், இதுகுறித்து அவர் அளித்த மற்றொரு பேட்டியில், ‘நான் ஒன்றும் நாடகமாடவில்லை; பல ஆண்டுகளாக நான் அனுபவித்த வலி, மன அழுத்தம் மற்றும் பயத்தினை வௌிப்படுத்தினேன்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் நடிக்கவிருந்தேன். தற்போது தனக்கு நேரும் துன்புறுத்தல்களுக்கும், சுஷாந்தின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். அமைதியான, ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து வரும் என்னை, ஊடகங்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. இதுபோன்ற செய்திகள் வேதனை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். தனுஸ்ரீயின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு நடிகை சோமி அலி உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்து, பாலிவுட்டின் நச்சுத்தன்மை வாய்ந்த கலாசாரத்தை மீண்டும் விமர்சித்து வருகின்றனர்.