கன்னியாகுமரியில் இருந்து புனே சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகையால் பயணிகள் அலறல்: ஆந்திராவில் பரபரப்பு
திருமலை: தமிழகத்தில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், புனே நோக்கி ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், நந்தலுரு மற்றும் ஹஸ்தவரம் இடையே ரயில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏசி பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
மேலும் சிலர் உடனே ரயில்வே கார்டுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே லோகோ பைலட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், நந்தலுருவில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயிலில் இருந்து பயணிகள் அச்சமடைந்து கீழே இறங்கினர். அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் புகை கிளம்பிய பெட்டியின் அடியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரயிலின் பிரேக்குகளில் இருந்து புகை வருவது கண்டறியப்பட்டது. உடனே பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் ரயில் புனே நோக்கி புறப்பட்டு சென்றது.