நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றம் சார்பில் புதிய விசாரணைக் குழு: சபாநாயகர் ஓம்பிர்லா திட்டம்
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பண மூட்டைகள் சிக்கின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து அவரை பதவி நீக்கம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. நீதிபதி வர்மாவை பதவி நீக்க கடந்த 21ம்தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதே போல் மாநிலங்களவை எம்பிக்களும் அப்போதைய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி தன்கர் உத்தரவிட்டார். அன்று இரவே அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பான சூழலில் யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கான ஆலோசனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்களவை தலைவர் கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.