புதுடெல்லி: கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில் வசூலான தொகையை விட 7.5% அதிகம். இது தொடர்பாக ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையைவிட 7.5 சதவீதம் அதிகம். கடந்த மாதம் வசூல் ரூ.1.84 லட்சம் கோடி ஆகும்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாகவும், இறக்குமதி வரி 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.52,712 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டி ரீபண்ட் ஆண்டுக்கு ஆண்டு 66.8 சதவீதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை 2025 ல் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.