வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஸ்வந்த் வர்மா இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கருகின. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழலில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமைத்த உள்விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உருவாக்கப்பட்ட குழுவானது முறையாக அமைக்கப்படவில்லை என்றால், பிறகு எதற்காக அந்த குழுவின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பு கருத்துக்களை கூறினீர்கள். மேலும் நீங்கள் நீதிமன்றத்தையே தாமதமாக நாடியுள்ளீர்கள். ஒரு அரசியல் சாசன பொறுப்பில் வகிக்கும் உங்களுக்கு அது கூடவா தெரியாது?. இல்லை என்று மட்டும் தயவுசெய்து சொல்லி விடாதீர்கள். அது உங்களுக்கு தான் அசிங்கம். அதற்கு பதிலளித்த நீதிபதி வர்மா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வரம்புக்குள் வரக்கூடியது.
ஆனால் இதை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் தலைமை நீதிபதி தேவையில்லாமல் எடுத்துச் சென்று இருக்கிறார் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்துச் சென்றதில் எந்தவித தவறுகளும் கிடையாது என்று கடும் கண்டனத்துடன் சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு அதாவது நாளைக்கு ஒத்திவைத்தனர்.