பாலசோர்: இந்தியா புதிதாக உருவாக்கிய பிராலே ஏவுகணை 2 முறை ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராலே என்பது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும். பிராலே ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு பலவகை ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பிராலே ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராலே ஏவுகணை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் போர்க்கால பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது 350 முதல் 700 கிலோ எடை உடையது. இந்த பிராலே ஏவுகணை கடந்த திங்கள்(ஜூலை 28) மற்றும் நேற்று ஆகிய இருதினங்களில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இரண்டு முறை விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.