பெங்களூரு: தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக மஞ்சுநாதர் கோவில் முன்னாள் தூய்மைப் பணியாளர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக புகார்தாரர் கொடுத்த புகார் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்தது. ஏடிஜிபி பிரணோவ் மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகள் எம்.என்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கை ஒட்டுமொத்த மாநிலமும் உன்னிப்பாகக் கவனித்துவரும் நிலையில், பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் எஸ்.ஐ.டி இந்த வழக்கை ரகசியமாக தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கில் முறையான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்ட எஸ்.ஐ.டி, குற்றச்சாட்டுகள் குறித்த முதற்கட்ட தகவல்களைச் சேகரித்து, விரைவில் அறிக்கைகளை பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.சட்டவிரோத சிறைவாசத்திற்கு ஆளானதாகக் கூறும் புகார்தாரர், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோருவதுடன், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சில காவல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் செல்வாக்குமிக்க நபர்களின் கூட்டுச்சதி என்றும் குற்றம்சாட்டியுள்ளார். புகார்தாரரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு எஸ்.ஐ.டி தர்மஸ்தலாவிற்கு பதிலாக தென்கனரா மாவட்டம் பெல்தங்கடியில் முகாமிட்டுள்ளது. மாநில அரசு விதித்த கால அவகாசத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எஸ்.ஐ.டி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.