டெல்லி: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி தான் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி அடைந்தாள் ஆட்சியில் பாஜக பங்கு பெரும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும், பாஜக மூத்த தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடுவதையும் அமித்ஷா தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அதிமுக தலைவர்கள், தொடர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆனால் அமித்ஷா அவ்வாறு கூறவில்லை என்று பேசி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா; எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில் ஆட்சியில் பாஜக நிச்சயம் பங்குபெறும் என்றும் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக, தவெக போன்ற சிறிய கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளதா என்ற கேள்விக்கு தற்போது அது பற்றி கூற முடியாது என்ற அமித்ஷா, தமிழ்நாட்டில் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரே மேடைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். பாஜக தேசிய தலைவர் பதவிக்கு யாருடைய பெயரும் பரிசீலிக்கப்படவில்லை என்றும், மிக விரைவில் பாஜக தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ், பாஜக இடையே கருத்து மோதல் என்ற தகவலுக்கு அமித் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.