Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பீகார் தீவிர திருத்த விவகாரம் அதிக வாக்காளர்களை நீக்கினால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்துள்ள வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக காண்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது.

அதேநேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி

இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழகக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணன்,” வாக்காளர் திருத்த பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்னையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” அனைத்து தரப்பினரும் முன்னதாக கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் இரு தரப்பினரிடமிருந்தும் முன்மொழியப்பட்ட காலக்கெடு மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அவசரம் மற்றும் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் பட்டியலிட்டு இரு நாட்களும் தொடர் விசாரணையாக நடத்தி முடிக்கப்படும். இருப்பினும் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். அதிக வாக்காளர்களை நீக்கினால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கையாக தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.