Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திமிரி அருகே கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்திய 2 பேர் கைது

*10 கி.மீ. தூரம் விரட்டி சென்று பிடித்த போலீசார்

கலவை : திமிரி அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமம் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை திருடிய மர்ம நபர்கள், அவற்றை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இருப்பதாக திமிரி போலீசாருக்கு நேற்று காலை 6 மணியளவில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போலீசார் வருவதை கண்டதும் மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்து ஆட்டோவை வேகமாக ஓட்டினர். ஆனாலும், போலீசார் விடாமல் அவர்களை பைக்கில் விரட்டிச்சென்றனர். சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, ராட்டிணமங்கலம் கிராமம் அருகே லோடு ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர், பிடிபட்ட இருவரையும் திமிரி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வீராசாமி தெருவை சேர்ந்த ராமன் மகன் ராஜி(43), ஆரணிபாளையம் சத்யா நகரை சேர்ந்த அப்பாதுரை மகன் சந்திரகுமார்(65) என்பதும் மாடுகளை விற்பனை செய்வதற்காக நோட்டமிட்டு திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து 2 மாடுகளையும், அவற்றை கடத்தி செல்வதற்காக பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, மீட்கப்பட்ட மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ராஜி, சந்திரகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவரும் இதுபோன்று வேறு இடங்களில் மாடு திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மாடு திருடர்களை சினிமா பாணியில் விரட்டி சென்று கைது செய்த திமிரி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.