Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி செய்த பெண் 3 பேர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

*திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண் ஒருவர் ரூ.3.30 லட்சம் வாங்கி மோசடி செய்ததை கண்டித்து தொட்டியத்தை சேர்ந்த வாலிபரின் பெற்றோர், அவரது உறவினர் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர்.

இதில் மனு அளிப்பதற்காக தொட்டியம் சஞ்சீவி நகரை சேர்ந்த கோபிநாத் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் வந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் கோபிநாத் தவிர அவரது பெற்றோர், உறவினர் உள்பட 3 பேரும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3பேரையும் தடுத்து நிறுத்தி அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் கோபிநாத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது: பிபிஏ பட்டதாரியான நான் வெளிநாட்டு வேலை தேடி வந்தேன். சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டை சேர்ந்த பெண் ஒருவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.30 லட்சம் பெற்றார்.

ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை. நிலத்தை விற்று பணம் கொடுத்தோம். இதனால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றேன். அவரிடமிருந்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்றார்.