திருவாரூர் அருகே தகாத உறவில் பிறந்தது ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை: கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூனமடை கிராமத்தில் வசித்து வருபவர் முரளி மனைவி சந்தோஷ் குமாரி (30). இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2023ல் உடல் நலக்குறைவு காரணமாக முரளி இறந்துவிட்டார். இதனால் சந்தோஷ் குமாரி கூனமடை கிராமத்தில்தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் ஏற்கனவே திருமணமான தினேஷ் (32) என்பவருக்கும், சந்தோஷ்குமாரிக்கும் தகாத உறவு ஏற்பட்டது.
இதன் காரணமாக கர்ப்பமடைந்த சந்தோஷ்குமாரிக்கு கடந்த மாதம் 13ம்தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தகாத உறவில் பிறந்த ஆண் குழந்தையை விற்பதற்கு தினேசும், அவரது தாயார் வாசுகியும் முயற்சி செய்தனர். இதை அறிந்த சந்தோஷ்குமாரி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பிறந்து 12 நாட்களேயான ஆண் குழந்தையை தினேஷ் மற்றும் அவரது தாயார் வாசுகியும் (65) சேர்ந்து மன்னார்குடி டெப்போ தெருவில் வசிக்கும் புரோக்கர் விக்னேஷ் (27) மூலம் கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராதாகிருஷ்ணன் (57), அவரது மனைவி விமலா (45) ஆகியோரிடம் ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார்குடி நகர போலீசில் நேற்றுமுன்தினம் சந்தோஷ்குமாரி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ், அவரது தாயார் வாசுகி, புரோக்கர் விக்னேஷ் மற்றும் குழந்தையை வாங்கிய ராதாகிருஷ்ணன், அவரது மனைவி விமலா ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மீட்கப்பட்ட ஆண் குழந்தை திருவாரூர் குழந்தைகள் நலக்குழு வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.