ஊட்டி : ஊட்டியில் சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிறுமி சூர்யாவுடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் சிறுமி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதை சூர்யாவால் ஏற்க முடியவில்லை.
ஆத்திரமடைந்த சூர்யா, சிறுமி தன்னுடன் பழகிவிட்டு திடீரென பேச மறுத்ததால் சிறுமியுடன் பழகிய நாட்களில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணைஊட்டியில்உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.