Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை அருகே ரகளை செய்தவர்களை பிடிக்க சென்ற எஸ்ஐயை வெட்ட முயற்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு: போலீஸ்காரர், வாலிபர் படுகாயம்

பாப்பாக்குடி: நெல்லை அருகே பாப்பாக்குடியில் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயற்சித்த வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த ரவுடி, தாக்குதலில் படுகாயமடைந்த வாலிபர் மற்றும் போலீஸ்காரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி இந்திரா காலனி, சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சக்திகுமார் (22). பானிபூரி விற்று வருகிறார். தற்போது ரஸ்தாவூரில் குடியிருக்கும் இவருக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த துரை மகன் சண்முகசுந்தரம் (18) மற்றும் ஒரு இளஞ்சிறாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சக்திகுமாரை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள குளத்திற்கு சண்முகசுந்தரமும், இளஞ்சிறாரும் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அங்கு அவரிடம், நாங்கள் செய்யும் ரவுடித் தனத்தை போலீசுக்கு எப்படி தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி, அரிவாளால் தாக்கினர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி, ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அவரைத் தேடி அரிவாளுடன் இருவரும் சுற்றித் திரிந்தனர். தகவலறிந்து பாப்பாக்குடி ரோந்து போலீசார் இருவரையும் பிடிக்க விரைந்து சென்றனர். ஆனால் அவர்களையும் இருவரும் அரிவாளுடன் விரட்டினர்.

இதில் சிறப்பு படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ரஞ்சித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பாப்பாக்குடி எஸ்ஐ முருகன் வந்து, அரிவாள்களுடன் நின்றிருந்த சண்முகசுந்தரத்தை எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் எஸ்ஐ முருகனை வெட்ட பாய்ந்தனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள எஸ்ஐ முருகன், அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அடைக்கலம் புகுந்தார். விரட்டிச் சென்ற இருவரும் அந்த வீட்டு கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, எஸ்ஐ முருகனை வெட்ட பாய்ந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்களின் பாதுகாப்புக்காகவும், தற்காப்புக்காகவும் கைத்துப்பாக்கியால் இருவரையும் நோக்கி எஸ்ஐ முருகன் சுட்டார். இதனிடையே அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் வந்த சிறப்பு போலீஸ் படையினர் காயமடைந்த சக்திகுமார், போலீஸ்காரர் ரஞ்சித்தை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்ஐ சுட்டதில் மார்பு பகுதியில் காயமடைந்த சண்முகசுந்தரம், மற்றொரு இளஞ்சிறாரையும் தேடிப்பிடித்தனர். சண்முகசுந்தரத்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை எஸ்பி சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

* 8 வழக்குகள்

பிடிபட்ட சண்முகசுந்தரம் மற்றும் இளஞ்சிறார் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசியது, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.