திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை சேர்ந்தவர் முகமதுஆதாம் (23). தென்காசியில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், திருவாரூர் அருகே புலிவலம் காந்திநகரை சேர்ந்த மோகன் மகள் சவுமியா (21) என்பவரை கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக முகமது ஆதாமிடம் பேசுவதை சவுமியா நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது ஆதாம், தனது உறவினர்களான கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது ரசூல்தீன் (23), தென்காசியை சேர்ந்த ஹாஜி முகமது (23) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு 10.30மணி அளவில் புலிவலத்தில் உள்ள சவுமியா வீட்டுக்கு சென்று அங்கு தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து சவுமியாவின் தம்பி கோபிகிருஷ்ணனுக்கும் (19), முகமதுஆதாம் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த திருவாரூர் அருகே தியானபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), இவரது நண்பரான தட்சிணாமூர்த்தி (35) ஆகியோர் ஓடிவந்து கைகலப்பை விலக்கி விட்டனர். இதில் ஆத்திரமடைந்த முகமதுஆதாம் தரப்பினர், கத்தியால் சந்தோஷ்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தியை சரமாரியாக குத்தினர்.
இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் நள்ளிரவு 12.30 மணி அளவில் உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தட்சிணாமூர்த்தி திருவாரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து முகமது ஆதாமின் உறவினர்களான ஹாஜிமுகமது மற்றும் முகமது ரசூல்தீன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவான முகமது ஆதாமை போலீசார் தேடி வருகின்றனர்.