ஜிம்மில் மலர்ந்த காதல்: ஓட்டலில் தாலி கட்டி ஜாலி: வைரலாகும் வீடியோ, போட்டோ; கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக வாலிபர் மீது ஐடி பெண் புகார்
கோவை: பொள்ளாச்சி ஓட்டல் அறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர் குறித்து பெண் ஐடி ஊழியர் கோவை போலீசில் புகார் அளித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசிலிலும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர் மீது புகார் மனு அளித்தார். தொடர்ந்து அந்த பெண் கூறியதாவது: நான் கோவையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். பீளமேட்டில் உள்ள ஜிம்மிற்கு சென்று வந்த போது மயிலாடுதுறையை சேர்ந்த கிஷோர் (28) அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்தோம்.
2 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் உள்ள ஓட்டல் அறையில் வைத்து எனக்கு கிஷோர் தாலி கட்டினார். அதன் பின்னர் என்னை பல முறை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்தார். தற்போது கிஷோர் தாலி என்பது வெறும் கயிறு தான் அதை எப்படி திருமணம் என சொல்ல முடியும் என கேட்கிறார். கிஷோர் தாலி கட்டிய வீடியோ, அவர் என்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த இளம்பெண் மற்றும் கிஷோர் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த வீடியோ, ஓட்டல் அறையில் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
* ‘கருவை கலைக்க கூகுளில் மருந்தை தேடுனு சொன்னாங்க’
‘கிஷோரால் நான் கருவுற்றேன். அதனை நான் அவரது வீட்டிற்கு சென்று தெரிவித்தேன். அப்போது அவரது அக்கா யாழினி கூகுளில் பார்த்து ஏதாவது மருந்தை சாப்பிட்டு கருவை கலைக்க கூறி வற்புறுத்தினார். குழந்தை பிறந்தால் வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று என்னை தகாத வார்த்தைகளால் திட்டி விரட்டினார்’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.