Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி கணவர் கார் டிரைவரிடம் 4 நாட்கள் விசாரணை

தண்டையார்பேட்டை: ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 12ம்தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பின்னர், ஜனசேனா கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி, கணவர் உட்பட 5 பேர், இவரது உடலை தமிழ்நாடு சென்னை கொண்டு வந்து பேசின் பிரிட்ஜ் கூவம் பகுதியில் வீசிவிட்டு தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில், ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரத்னவேல்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளான ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகியின் கணவர் சந்திரபாபு (35), கார் டிரைவர் சேக் தாசன் (28) ஆகியோரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏழுகிணறு போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்ட் அனுமதிபடி 2 பேரையும் 4 நாட்கள் விசாரணைக்காக ஏழுகிணறு போலீசார் நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம்? என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.