Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் அருகே சாலையோர வீட்டில் தூங்கியபோது தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு 15 பவுன், ரூ.35 ஆயிரம் கொள்ளை

*காரில் வந்த 5 பேர் கும்பல் துணிகரம்

சேலம் : சேலம் அருகே அதிகாலை நேரத்தில் காரில் வந்த கும்பல், தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் வலசையூர் அருகேயுள்ள கோமாளிவட்டம் அரூர் பைபாஸ் சாலையோரம் வசித்து வருபவர் பூமாலை (55) விவசாயி.

செங்கல் சூளையிலும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சின்னபாப்பா (46). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மற்றொருவர் திருச்செங்கோட்டில் உள்ள பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஇ படித்து வருகிறார். இதனால் பூமாலை, சின்னபாப்பா மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை முடித்து விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பகுதியில் பூமாலை படுத்துக் கொண்டார்.

வீட்டுக்குள் சின்னபாப்பா படுத்திருந்தார். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் பைபாஸ் சாலையில் காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அந்த கும்பல் காரை பைபாஸ் சாலையில் நிறுத்திவிட்டு பூமாலையின் வீட்டுக்கு வந்துள்ளது.

அப்போது அவர்களின் பேச்சு சத்தம் கேட்டு எழுந்த பூமாலையை அந்த கும்பல் திடீரென தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்த துணியை எடுத்து பூமாலையின் வாயில் திணித்ததுடன், கையை பின்பக்கமாக கட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு எழுந்த சின்னபாப்பா வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் அவரையும் தாக்கி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த தாலிச்செயின், தோடை பறிக்க முயன்றனர். அப்போது பயத்தில் தோடை சின்னபாப்பாவே கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரின் கைகளையும் பின்பக்கமாக கட்டிப்போட்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து அங்கு பெட்டியில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர்.

இதையடுத்து தம்பதியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். தொடர்ந்து இதுபற்றி வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சின்னபாப்பா அணிந்திருந்த தாலிச்செயின், தோடு மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 15 பவுன் மற்றும் ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பைபாஸ் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.