சென்னை நட்சத்திர ஓட்டலில் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 10 சவரன் இழந்த தொழிலதிபர்: போதையில் விடியவிடிய நெருக்கமாக இருந்த பெண் தோழி எஸ்கேப்
சென்னை: சென்னை நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபர் ஒருவர் மது போதையில் உல்லாசமாக இருந்த போது, உடன் இருந்த பெண், 10 சவரன் நகையுடன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். சென்னை அடுத்த ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (47). தொழிலதிபரான இவர், வாரத்தில் 2 நாட்கள் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்துவது வழக்கம்.
அதன்படி கடந்த 27ம் தேதி அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே அறிமுகமான பெண் தீபிகா என்பவர் அந்த பாருக்கு வந்துள்ளார். இதை பார்த்த மணி அவருடன் பேசியுள்ளார். பிறகு இருவரும் ஒன்றாக பாரில் மது அருந்தியுள்ளனர். பிறகு இருவரும் அதே ஓட்டலில் 104 என்ற அறையை எடுத்து அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு உடல் சோர்வு காரணமாக தொழிலதிபர் மணி மறுநாள் காலை 10 மணிக்கு வரை எழுந்திருக்கவில்லை. பின்னர் மணி எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. உடனிருந்த தோழி தீபிகாவும் மாயமாகி இருந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் மணி தன்னுடன் இருந்த தீபிகாவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி உதவி ஆய்வாளர் மேத்யூ ரோஸ் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து 10 சவரன் நகையுடன் தலைமறைவான தீபிகாவை தேடி வருகின்றனர்.