சென்னையில் இருந்து துர்காபூர் சென்ற விமானத்தின் அவசர கால கதவு திறக்க முயற்சி: ஐஐடி மாணவரிடம் போலீசார் விசாரணை
சென்னை: சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 164 பேர் இருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அப்போது விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படும் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, விமான பணிப்பெண்கள் அவசர கால கதவை, திறக்க முயற்சித்தவர் குறித்து விசாரித்தனர். அப்போது விமானத்தின் அவசரகால கதவு அருகே, இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்கார்(27) என்பவர் அவசரகால கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் சர்காரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். அதில், கிண்டி ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி படித்து வருவதாகவும், சொந்த வேலையாக துர்காபூர் செல்வதாகவும் தெரிவித்தார். கவனக் குறைவாக விமானத்தின் அவசர கால கதவை திறக்கும் பொத்தனை அழுத்திவிட்டதாக தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், சர்காரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சர்காரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து சர்காரிடம் விசாரித்து வருகின்றனர்.