நாகப்பட்டினம், செப். 25: தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் வனத்துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று தொடங்கியது. முதல்வரின் உத்தரவின் படி கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டது. வரும் 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீத மரக்கன்றுகளை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
பசுமை தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணம் செய்ய தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டது.
நாகப்பட்டினம் தாமரைக்குளத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட வன பாதுகாவலர் பார்கவதேஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணாநிதி வரவேற்றார்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து பசுமை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி வன பாதுகாப்பு அலுவலர் அருண்மொழிவர்மன், நாகப்பட்டினம் வன பாதுகாவலர் சியாம்சுந்தர், மாவட்ட பசுமை தோழர் சானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.