புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஸ்வந்த் வர்மா இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூட்டை மூட்டையாக கட்டி ரூபாய் நோட்டுகள் கருகின. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இக்குழு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கையை வழங்கி இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் குழு வழங்கிய அறிக்கை மற்றும் நீதிபதி யஸ்வந்த் வர்மா வழங்கிய விளக்கம் உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார்.இதைத்தொடர்ந்து மற்றொரு பக்கம் யஷ்வந்த் வர்மாவை அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான வேலைகளும் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சூழலில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமைத்த உள்விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விசாரித்த் உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன பொறுப்பில் இருகும் ஒருவர் இப்படியா நடந்து கொள்வது என்பது உட்பட யஷ்வந்த வர்மாவுக்கு சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது.
இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\” நீதிபதி யஸ்வந்த் வர்மாவை நீதிபதி பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. எனவே இதுபோன்ற சூழலில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.
மேலும் நீதிபதியின் இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம் அவருடையதா இல்லையா என்பதை நாங்கள் ஏன் முடிவு செய்ய வேண்டும். அதனையும் நாடாளுமன்றமே முடிவு செய்யட்டும் என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம் அல்லது கூடாது என கூறுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.