நன்றி குங்குமம் தோழி
* அடை மாவு அதிகமாக புளித்துவிட்டால் அதை இட்லித் தட்டில் ஊற்றி அவித்து எடுத்து பிறகு அடுப்பில் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, அதில் உதிர்த்துப் போட்டு இட்லியை வதக்க சூப்பர் கார புட்டு ரெடி.
* அரிசி உப்புமாவிற்கு ரவை உடைக்கும் போதே அத்துடன் மிளகாய் வற்றலையும் சேர்த்து உடைத்து விட்டால் மிளகாய் வேஸ்ட் ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
* ரவையை வறுக்கும் போது சிட்டிகை உப்பு கலந்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் அண்டாது.- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* சாம்பாருக்காக துவரம் பருப்பை வேகவைக்கும் போது அதில் சிறிதளவு நெய் விட்டு வேகவைத்தால் சீக்கிரம் வேகும். மணமும் ருசியும் கூடும்.
* ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பு பொடி செய்து கலந்து தோசை வார்த்தால் உடலுக்கும் நல்லது. ருசியாகவும் இருக்கும்.
* எலுமிச்சை சாதம் செய்யும் போது ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு,உப்பு, மஞ்சள் தூள் ேசர்த்துக் கலக்கவும். அதில் தாளித்ததை ஊற்றி கலக்கிய பிறகு மொத்தமாக சாதத்தில் சேர்த்துக் கிளறினால் கூடுதல் சுவையுடன் சாதம் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா, அசூர்.
* கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்பு போட்டு தாளிப்பதற்கு பதில் வேர்க்கடலை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* நேந்திரங்காய் சிப்ஸ் செய்யும் போது, அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொண்டால் சிப்ஸ் நல்ல நிறத்துடன் இருக்கும்.
* இட்லி மிளகாய்ப் பொடி தயாரிக்கும் போது, அதனுடன் எண்ணெய்விட்டு வறுத்த கறிவேப்பிலையையும் சேர்த்து பொடி செய்தால் சூப்பரான சுவையுடன், மணமாக இருக்கும்.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.- அ.சித்ரா, காஞ்சிபுரம்.
* குழம்பு, பொரியல் செய்யும் போது அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு கொத்தமல்லி சேர்த்தால் மணமாக இருக்கும்.
* இட்லி கல் மாதிரி வருகிறது என்றால் நான்கு பச்சை அப்பளத்தை தண்ணீரில் நனைத்து பின் மிக்ஸியில் அரைத்து மாவில் சேர்த்து கலந்து இட்லி வேகவைத்தால் இட்லி பூ போல வரும்.
* பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும், அதில் இஞ்சியை சிறிய துண்டு தட்டிப்போட்டால் எண்ணெய் கசண்டு இருக்காது. பலகாரங்கள் பல நாட்கள் கெடாமலும் இருக்கும்.- எஸ்.உஷாராணி, கோவை.
* வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை அரிசி கழுவிய நீரில் நறுக்கிப் போட்டு வைத்தால் காய்கள் கருக்காது.
* நறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய நீரில் போட்டு அரைமணி நேரம் விட்டு சமைத்தால் கசப்பு குறைந்து விடும்.
* பச்சை மிளகாயை அதிக அளவில் நறுக்க வேண்டி வந்தால் கைகளுக்கு எண்ணெய் தடவிக் கொள்வது நல்லது. கைகளுக்கு எரிச்சல் குறையும்.
* காய்களை வேகவைக்கும் போது பொங்கி வராமலிருக்க சிறிது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.- விசாலாட்சி கண்ணன், ஓசூர்.
* எத்தனை பிசைந்தாலும் தோசைக்கல்லில் சப்பாத்தி விறைப்பாக சுட்ட அப்பளமாக வருகிறதா? வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து மாவுடன் கலந்து இட்டு பாருங்கள். சப்பாத்தி பூப்போல் மிருதுவாய் வரும்.
* அரைத்துவிட்ட சாம்பாருக்கு தனியா, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு சேர்க்கும் போது பாதி கடலைப்பருப்பு, பாதி பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து தேங்காய், ஒரு தக்காளி சேர்த்து அரைத்து கொதிக்கும் புளித் தண்ணீரில் சேருங்கள். பொட்டுக்கடலை வைத்து அரைப்பதால் சாம்பார் திரி திரி ஆகாமல் ஒன்று சேர்ந்து வரும்.
* மோர்க்குழம்பு வைக்கும் ேபாது தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் கடுகையும் ஊறவைத்து சேர்த்து அரைத்து புளித்த மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க் குழம்பு மணக்க மணக்க இருக்கும்.
* கூட்டுக்கறி செய்யும் போது சில சமயம் வீட்டில் தேங்காய் இருக்காது. ஒரு சிறிய கப் அளவு புழுங்கலரிசியை எடுத்து, வாணலியில் புரட்டி வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். தேங்காய் துருவலுக்கு பதில் இந்தப் பொடி செய்து சேர்த்தால் தேங்காய் போட்டது போலவே இருக்கும்.
தொகுப்பு: ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.