நன்றி குங்குமம் தோழி
சத்தான உணவு!
ஆண்பெண் இருவருக்கும் தலைமுடி பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் சுற்றுப்புறச் சூழல், மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிரும் பிரச்னையினை பலர் சந்தித்து வருகிறார்கள். இதனால் முடி மெலிந்து, பொலிவிழந்து, பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். முடிந்தவரை சத்தான உணவினை சாப்பிடுவது மட்டுமில்லாமல், தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
தலைக்கு குளிக்கும் போது என்ன செய்யலாம்... செய்யக்கூடாது!
* சீயக்காய் பயன்பாடு குறைந்துவிட்டது. எல்லோரும் ஷாம்புவினையே உபயோகிக்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது, எப்போதும் ஷாம்புவினை தண்ணீரில் கரைத்து அதன் பிறகு தான் தலையில் தேய்க்க வேண்டும். ஷாம்புவினை நேரடியாக தலையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
*ஷாம்பு தலைமண்டையில் இல்லாத அளவிற்கு தலைமுடியினை நன்கு அலச வேண்டும்.
*தலைக்கு குளிக்கும் முன் எண்ணை வைத்து மசாஜ் செய்த பிறகு குளிக்கலாம். முடி வறண்டு போகாமலும், உடையாமலும் பாதுகாக்கும்.
*முடி உதிர்வதை தடுக்க முட்டையின் வெள்ளை கரு, மருதாணி போன்ற இயற்கை மாஸ்கினை பயன்படுத்தலாம்.
*ஷாம்பு போட்டு தலை குளித்த பிறகு மறக்காமல் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். இதனை முடியில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். தலைமண்டையில் தேய்த்தால், அந்தப் பகுதி வறண்டு போய், முடி உதிரும் அபாயம் ஏற்படும்.
*தலைக்கு குளித்த பின் முடியினை நன்றாக காயவைத்த பிறகே சீப்பினால் சீவ வேண்டும். ஈரத்துடன் தலை சீவனால் தலை முடி தன் உறுதியினை இழக்கும்.
*தலைமுடியை டவலால் அழுத்தி துடைக்கக்கூடாது. லேசாக துடைத்தாலே போதுமானது.
*உடல் உஷ்ணம் அதிகரித்தால், தலைமுடி உதிரும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நிறைய பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*தலைமுடி வறண்டு போகாமல் இருக்க சீரம் பயன்படுத்தலாம்.
*தலைமுடி உதிராமல் இருக்க சீரான உணவுப் பழக்கம், முறையான தூக்கம், புரதம் மற்றும் இரும்பு நிறைந்த உணவுகள் போன்றவை கடைபிடிக்க வேண்டும்.