Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தக்கலை டவுன்ஹால் புனரமைப்பு பணி தீவிரம்

தக்கலை, அக்.29 : தக்கலை பழைய பஸ் நிலையத்தில் டவுன்ஹால் என அழைக்கப்படும் சர்சிபி ராமசாமி ஐயர் அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்சிபி ராமசாமி ஐயரின் 60வது பிறந்த நாளை ஒட்டி அவரது மக்கள் சேவைக்காக நகர மக்களது பங்களிப்பால் சுமார் 35 சென்ட் இடத்தில் கட்டப்பட்டது ஆகும். தமிழக அரசின் வருவாய்துறை வசம் இருந்த அரங்கம் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு இங்கு நூலகம் செயல்பட்டு வந்தது. தற்போது பல இடங்களில் கட்டிடம் அதன் பொலிவை இழக்கத் தொடங்கியது. இந்த அரங்கம் பாழடைந்து பயனற்ற நிலைக்கு தள்ளப்பட்டது நகர மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நகர்மன்ற சேர்மன் அருள் சோபன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து டவுன்ஹாலை பார்வையிட்ட அவர் இதனை புனரமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். இதனடிப்படையில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுகீடு பெறப்பட்டது. நிதி ஒதுக்கீடு பெற்றதும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின. தற்போது அரங்கின் மேற்கூரைகள் அகற்றப்பட்ட நிலையில் புதிய கூரைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் அரங்கின் தரைப்பகுதியில் டைல்ஸ் கற்கள் பதித்தல், சுவர்களில் வர்ணங்கள் பூசுதல், மின்வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு நகர மக்கள் விழாக்களுக்கு பயன்படுத்தும் வகையில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.