Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் 10 லட்சம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் பாதிப்பு: அப்போலோ மருத்துவமனை தகவல்

சென்னை: இந்தியாவில் 450 மில்லியன் குழந்தைகளில் 1 மில்லியன் (10 லட்சம்) குழந்தைகள் நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 22 முதல் 29ம் தேதி வரை உலக முதன்மை நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை (PID) விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் முதன்மை நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. அப்போது அப்போலோ மருத்துவமனை ரத்தப் புற்றுநோய் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் ரேவதி ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: நோய் எதிர்ப்பு திறன் பற்றாக்குறை என்பது அரிய நோயாகும். 90களில் 20 வகையான நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை நோய்கள் மட்டுமே இருந்தது.

ஆனால், தற்போது 420க்கு மேற்பட்ட நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை நோய்கள் உள்ளது. எக்ஸ்எல்ஏ, எஸ்சிஐடி , சிஜிடி ஆகிய மூன்று நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை நோய்கள் தற்போது அதிகமாக உள்ளது. இந்தியாவில் 450 மில்லியன் குழந்தைகளில் 1 மில்லியன் (10 லட்சம்) குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற நோய் எதிர்ப்பு திறன் பற்றாக்குறை நோய், பிறந்த குழந்தை முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும். இந்தியாவில் மிக நெருக்கமான ரத்த உறவுகளுக்குள் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக இருப்பதால், இந்த பாதிப்பு அதிகளவு இருக்கிறது. இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

நோய் எதிர்ப்புதிறன் பற்றாக்குறை உள்ள நபர்கள் அதனை உணராமல் வாழ்கின்றனர். சிகிச்சையளிக்கப்படாத உடல்நல சிக்கல்கள் மற்றும் அதிகரித்த இடர்வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கிறது.

இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மத்தியில் அதுவும் குறிப்பாக ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளில் அதிக உயிரிழப்பு விகிதம் இருக்கிறது. மக்கள் இந்த நோய் பற்றி விழிப்புணர்வு அடைய வேண்டும். முதன்மை நோய் எதிர்ப்புதிறன் குறைபாடுக்கு தொடக்க நிலையிலேயே கண்டறிதலும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதும், நல்ல வாழ்க்கை தரத்தோடு குழந்தைகள் வாழ்வதற்கு உதவும். அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.