Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தனது மனைவியை தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்!

நன்றி குங்குமம் தோழி

மனம் பேசும் நூல் 5

மருத்துவம் சார்ந்த புத்தகங்களை எழுத மருத்துவர்களுக்கும் ஒரு ரசனை வேண்டும். ஏனெனில், மருத்துவ அறிவியல் சார்ந்த வார்த்தைகளை எளிமைப்படுத்தி, பொதுமக்களுக்கு புரிய வைப்பதற்கும், நோய்க்கான சிகிச்சை முறைகளைப் படித்ததும் பயந்து விடாமல் இருப்பதற்கும், வார்த்தைகளை ரசனையாய் கையாளத் தெரிவது மிகவும் அவசியம். இப்படியான

ஒரு ரசனையான நரம்பியல் மருத்துவர்தான் ஆலிவர் சேக்ஸ். நியூரோ சைக்கியாட்ரி துறை பற்றி பேசும் இவரின் இந்தப் புத்தகத்தை, பேராசிரியர் ச.வின்சென்ட், மிக எளிமையாய், தெளிவான அறிவியல் வார்த்தைகளை பயன்படுத்தி, மருத்துவப் பார்வையில் சற்றும் குறைவின்றி, தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில், சைக்கியாட்ரி மருத்துவ சிகிச்சை பிரசித்தி பெற்றதாக இருக்கும் நிலையில், அதென்ன நியூரோ சைக்கியாட்ரி என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்நூலின் மருத்துவர் நியூரோ சைக்கியாட்ரி என்பதை மனதுக்கும், உடல் பாதிக்கும் போது ஏற்படும் மூளைக்கும் உள்ள சிக்கலைப் பற்றிய அடிப்படைகளை இது ஆராய்கிறது என்கிறார். அதாவது, எந்தவொரு மனிதனும் நோயால் பாதிக்கப்படும் போது, நோய் பற்றிய கதைகளும், அவனுள் ஏற்படும் குழப்பங்கள் சார்ந்த கதைகளையும் கூற ஆரம்பிப்பான். அந்தக் கதைகள் அனைத்திலுமே, பாரம்பரியமான மரபு சார்ந்த கதைகளோடு தன்னையும், தனது நோயையும் இணைத்து கதையாக்கி விவரிக்க ஆரம்பிப்பார்கள். இந்நூலின் ஆசிரியர் அந்தக் கதைகளையே ஆய்வுக்கு முக்கியமானதாய் பார்க்கிறார்.

நோயாளிகள் தங்கள் வாழ்க்கையை, கட்டுக்கதைகளோடு இணைத்து சில உண்மைகளைக் கூறும்போது, அதனை அறிவியலோடு இணைத்து சிகிச்சைக்கு முயற்சிக்கிறார் மருத்துவர்.

சிக்மண்ட் பிராய்ட் காண விரும்பிய மூளை சார்ந்த புதிய அறிவியல் மருத்துவத்தையே, A.R.லூரியாவும், அவரின் சில மருத்துவ நண்பர்களுமாக இணைந்து, நியூரோ சைக்காலஜி சிகிச்சை

முறையினை கண்டுபிடித்தார்கள்.மூளை சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறதென்றால், இடது பக்க மூளையின் நரம்புகள் சார்ந்த பிரச்னைகளை எளிதாய் பார்க்க முடிகிறது.

மேலும், இடது பக்கத்தில் இருக்கிற நசிவுகளையும் காண முடியும். ஆனால், அதேநேரம் வலது பக்கத்தில் ஏற்படும் நோய்களை தெளிவாய் காண முடிவதில்லை என்கின்றனர் மருத்துவ நண்பர்கள். உதாரணத்திற்கு, ஒருவருக்கு வலது பக்க மூளையில் பிரச்னை எனில், அந்த நோயாளியால் தனக்கு நோய் இருக்கிறது என்பதை உணர முடியாது என்கிறார்கள். இப்படியாக இப்புத்தகம் முழுவதும் வலது பக்க மூளை, இடது பக்க மூளை சார்ந்த பிரச்னைகளை அவர் சந்தித்த நோயாளிகளை வைத்து நமக்கு விவரிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சியில், ஒவ்வொரு மனிதனும் முன்னேற முக்கிய காரணம், அவனின் முடிவெடுக்கும் திறனே. முடிவெடுக்கும் திறன் இல்லையென்றால் அந்த உயிர் அழிந்து விடும். மூளை நரம்புகள் பாதிக்கும் போது, முடிவெடுப்பதில்தான் தடுமாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது என்கின்றனர் இவர்கள்.ஒரு நோயாளி மிகவும் திறமையான இசைக் கலைஞர். அவருக்கு திடீரென்று, மனித உருவங்கள் தெரியவில்லை. அதாவது, நம்மிடம் ஒரு முகத்தைக் காட்டினால், அவர் எத்தகைய ஆளுமை என்று கூறிவிடுவோம். இது முகம் அறிதல் நிலை. இந்த அறிதல் நோயாளிக்கு இல்லை. அவர் திறமையான இசைக் கலைஞராக இருந்தும், இடது பக்க மூளையில் ஏற்பட்ட நசிவால், மனித உருவங்களை அடையாளம் காண முடியாமல் போக, பெரும்

அவதிக்குள்ளாகிறார்.

அப்போது அவரது மனைவியை தொப்பியாக நினைத்துக் கொள்கிறார். தான் பார்க்கும் மனித முகங்களை இப்படியாக அவர் பார்த்த பொருட்களோடு உருவகப்படுத்திக்

கொள்கிறார். இதில் அவரின் குடும்பத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதன்பின், அவரது குடும்பத்தினரும் மருத்துவ ஆலோசனைகளின் உதவியோடு,

அவரது நரம்பியல் பாதிப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

குடியினால் மனித மூளை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாய், இந்த நோயாளிகள் குறித்தும் மருத்துவர் குறிப்பிடுகிறார். அதாவது, ஜிம்மி என்ற நபர் கப்பல் படையில் சிறந்த ஆளுமையாய் விளங்குகிறார். ஒருநாள் அவர் மருத்துவரிடத்தில் அவரது வெற்றிகளையும், அவர் வேலை பார்த்த விதத்தையும் பெருமையாகக் கூறிக் கொண்டே வர, ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாகி விடுகிறார். அதாவது, அந்த குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவருக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. அதாவது, Retrogade Amnesia என்ற பின்னோக்கிய மறதி நோயினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நினைவாற்றலின் அளவிற்கு அவரது மூளையில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் காரணமாக, எதையும் நினைவில்

வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவரது நினைவுப்பகுதி அழிய ஆரம்பித்துவிட்டது. ஹிப்னாடிசம் மூலமாக எந்த நேரத்தில் என்ன பாதிப்பால் இப்படி நினைவுகளை இழந்தார் எனக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். அவரின் திறமை, அவரின் ஆளுமை, அவரின் ரசனையென, கடந்த காலத்தில் ஆழமாக ஊன்றிய விஷயங்கள், செய்த செயல்களின் வேர்கள் என எதுவும் அவரிடத்தில் தற்போது இல்லை. வேரில்லா மனிதராய் பார்க்க வேண்டிய நிலையில் தன்னைக் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார். அவரின் நினைவுகள் முற்றிலுமாக அழிய ஆரம்பித்திருந்ததால், அந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை.

தற்போது ‘டயட் டயட்’ என்று ஓடிக் கொண்டே, சிலர் அளவுக்கு அதிகமான விட்டமின் சார்ந்தசாப்பாடுகள், மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். விட்டமின் மாத்திரைக்கு அடிமையானால் என்ன நேரும் என்பதை இந்த நோயாளி மூலம் நமக்கு விவரிக்கிறார் மருத்துவர். அதாவது, கிறிஸ்டினா என்ற பெண், விளையாட்டுத் துறையில் தன்னை மிகச்சிறந்த வீராங்கனையாக, ஆளுமையாக வளர்த்துக் கொண்டவர். ஒருநாள் அவருக்கு பித்தைப்பையில் கல் இருக்கிறது என்று தெரியவர, அறுவை சிகிச்சைக்கு தயாரானார். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள், அவர் தூங்கி எழுந்தபோது, அவரின் கைகளையும், கால்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், அவரால் அசைக்க முடியவில்லை. தனக்கு உடல் உறுப்புகள் இல்லை என்ற உணர்வு அவருக்கு மேலோங்கியது.

அவரது தொடர்ச்சியான அழுகை, அவரின் வாழ்நாளையும், கனவையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டதோ என்கிற அளவுக்கு இருந்தது.ஆரம்பத்தில் மருத்துவர்கள் குழம்பிப் போனார்கள். பிறகு முழு உடல் பரிசோதனைக்கு அவரை உட்படுத்தியதில், தண்டுவடத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு நார்களில் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தார்கள். அதற்கான சிகிச்சை மற்றும் மனநலம் சார்ந்த தெரபிகளும் வழங்கப்பட்டது. சிகிச்சைக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பும், அவரின் மனதைரியமும் கிறிஸ்டினா என்ற விளையாட்டு வீராங்கனையை மறுபடியும் மீட்டெடுத்தது.

எதனால் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என ஆராய்ந்ததில், விட்டமின் பி 6 பைரிடாக்சின் மருந்தை அதிகமாய் உட்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பென கண்டறியப்பட்டது. உடல் நலத்தில் அக்கறை காட்டுவதாய் நினைத்து, நாம் எடுக்கும் உணவுகள், உடலை வருத்திக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், சிலருக்கு அவர்களது நரம்பு நார்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன என்பது பாதிக்கப்பட்ட பின்பே நமக்கு தெரிகிறது.நோயாளியின் மனதையும், உடலையும் அறிவியல் பூர்வமாக தொடர்ந்து அவர் கவனித்துக் கொண்டே வருகிறார். அதனால், அவரின் சிகிச்சை முறையின் தாக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது. உடல் ரீதியாய் ஏற்படும் சில பிரச்னைகள், மனிதர்களின் உணர்வுகளையும், புலனுணர்வுகளையும் கேள்விக்கு உட்படுத்துகிற அதேவேளை, நியூரோ சைக்கியாட்ரி என்ற துறையை நாம் மருத்துவ ரீதியாக பயன்படுத்த பழக வேண்டும் என்கிறார் இவர்.

உடல் ரீதியான பிரச்னைகள் எதுவும் எழாதவரை நாம் உடலைப் பற்றியும், மனதைப் பற்றியும் யோசிப்பதில்லை. நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினருக்கோ பாதிப்பு ஏற்படும் போதே, காரணம் தெரியாமல் திணற ஆரம்பிக்கிறோம். அதற்காகவே இம்மாதிரியான புத்தகங்கள் நமக்கு வழிகாட்டுதல்களாக அமைகின்றன.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்