Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவைக்காயின் மருத்துவ பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தாவரங்களின் அரிய பண்புகள் மிகவும் சிறப்புடையதாகும். இவைகளின் தனிப்பட்ட பண்பு மற்றும் குணங்களால் இன்றும் இவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள் என பல்வேறு பிரிவுகளில் வருகின்ற தாவரங்கள் நமக்கு ஒப்பற்ற பயன்களை வழங்குகின்றன. அவ்வகையில் சிறந்த பயன்களைத் தரும் கோவைக்காய் பற்றி இங்கு காணலாம்.

கோவைக்காயின் தாயகம் இந்தியாவாகும். இது ஒரு பல்லாண்டு வாழும் கொடி வகைத் தாவரமாகும்.

இதன் இலை, வேர், செடி, காய் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டதாகும். இலைகள் பசுமையாகவும், சிறிது தடித்தும் இருக்கும். கோவைக்காய் கசப்பாகவும், கனி இனிப்பாகவும் காணப்படும். கோவைத் தாவர வேரில் ரெசின், அமைலிக் ஆல்கஹால், ஆல்கலாய்டு, ஸ்டார்ச், பிசின், கொழுப்பு எண்ணெய், அங்கக அமிலங்கள் போன்றவை அடங்கியுள்ளன.

இதன் தாவரவியல் பெயர் காக்சினியா இண்டிகா என்பதாகும். இது குக்குர்பிட்டேசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ்வருகிறது.

எப்படி பயன்படுத்தலாம்

கோவைக்காயை கூட்டாக, பொரியலாக, குழம்பாக சமைத்து உண்ணலாம். காய்களை நறுக்கி உப்புநீரில் ஊறவைத்து, உலரவைத்து பொரித்து உண்ணலாம். பழத்தை அப்படியே உண்ணலாம். இலையை அரைத்து அல்லது சாறு எடுத்து பயன்படுத்தலாம். தண்டு, வேர்ப்பகுதிகளை கஷாயமாக்கிப் பயன்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள்

*கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறையும்.

*கைப்பிடி இலைகளை எடுத்து சாறுபிழிந்து, ஒரு தேக்கரண்டி சாறுடன், சிட்டிகை மிளகுப்பொடி கலந்து அருந்த இருமல், சளி குணமாகும்.

*கைப்பிடி இலைகளை நெய்விட்டு வதக்கி அதன்பின் அரைத்து பட்டாணி அளவு ஒரு நாள் மூன்று முறை தின்ன இரு நாட்களில் வயிற்றுப்புண் ஆறும்.

*இலைகளை அரைத்து கட்டிகள் மேல் பூசிட கட்டி பழுத்து உடையும். புண் ஆறும்.

*அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் கோவை இலைச்சாறு கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு, தேமல், படை, பற்று இதன் மேல் பூசிட இவை குறையும். இந்த எண்ணெயை ஆசனவாய் எரிச்சல் ஏற்படும்போது வெளிப்பூச்சாக பூசிவர எரிச்சல் மாறும்.

*கோவைக்காய் வற்றலை பொரித்து உண்டுவர உடல்சூடு தணியும்.

*கோவைக்காயை பச்சையாக அடிக்கடி உண்ண வாய்ப்புண், வயிற்றுப்புண் மாறும்.

*கோவை இலைச்சாறு விஷங்களை முறிக்கும் தன்மையுடையது.

*இலையைப் பிழிந்து சாறு எடுத்து நெய்யில் கலந்து தீப்புண், புண்கள் மேல் பூசிவர இவைகள் ஆறும்.

*அடிக்கடி கோவைக்காயை உணவில் சேர்த்துவர நீரிழிவு, ரத்த அழுத்தம், சயரோகம் போன்றவை குணமாகும்.

*கோவை இலையை அரைத்து வெண்ணெய்யில் குழைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை ஆறும்.

தொகுப்பு: சா.அனந்தகுமார்