Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோயை விரட்டும் கண்டங்கத்தரி

நன்றி குங்குமம் டாக்டர்

குப்பைமேடு, தரிசு நிலம், சாலையோரங்களில் அழகிய வண்ணத்தில் பூ பூத்து, சிறிய கத்தரிக்காய் போன்று காய்ந்திருக்கும் கண்டங்கத்தரி செடியை கண்டால் அதை நாம் உடனே பயன்படுத்திக் கொள்வோம். இதனை சாதாரணமாக அவ்வப்போது எடுத்துக்கொண்டே வந்தால் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்குச் செல்வதை தடுக்கலாம். பாட்டுக்கு அழகு கூட்டத்தைக் கூட்டுவது, மருந்துக்கு அழகு நோயை விரட்டுவது. அந்த வகையில் கண்டங்கத்தரியின் மருத்துவ பயன்கள் இதோ...

*காலில் ஏற்படும் வெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளிவிதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும்.

*சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும்.

*இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்துவர வேர்வை நாற்றம் நம்மை விட்டு அகலும்.

*கண்டங்கத்தரி பழத்தை தீயில் வாட்டும்போது புகை எழும். இந்தப் புகையை பல்லில் படும்படி செய்தால் வலி தீரும். பல்லில் இருக்கும் கிருமிகள் அழியும்.

*கண்டங்கத்தரி வேர், ஆடுதொடா வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்துவர கபம் சம்பந்தமான காய்ச்சல் காணாமல் போகும்.

*கண்டங்கத்தரி காயை சுண்டைக்காய் போன்று குழம்பிலிட்டு சாப்பிட்டால் பசியைத் தூண்டும். உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

*கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையவை. பல் சம்பந்தமான நோய்கள் அனைத்திற்கும் இதன் விதைகள் பயன்படும்.

*கண்டங்கத்தரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பாக இருக்கும்போது, நல்லெண்ணெய் சேர்த்து, மெழுகு பதம் வர காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை காதில் 2 சொட்டு விட்டு வர காது நோய் குணமாகும்.

*கண்டங்கத்தரி வேருடன் சுக்கு, சீரகம், கொத்தமல்லி முதலியவற்றை போட்டு நீரில் நன்கு கொதிக்க வைத்து குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களும் நீங்கும்.மானாவாரியாக வளரக்கூடிய கண்டங்கத்தரியை கண்டுகொள்வோம். அதன் மகத்துவத்தை அறிந்து பயன்படுத்தி நோயற்று வாழ்வோம்!

- இந்திராணி தங்கவேல், சென்னை.