Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாப்பது எப்படி?

நன்றி குங்குமம் தோழி

இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தின் சில நாட்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் வகையில் இப்போதே வெப்பம் ஓரிரு நாட்களில் அதிகளவில் வாட்டி வருகிறது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் அளவு கூடுமே தவிர குறையாது. குறிப்பாக கத்திரி வெயில் என சொல்லக்கூடிய அக்னி வெயில் காலங்களில் அனல் காற்று வீசும். இப்படி இருக்க அக்னி வெயில் துவங்கும் முன்னரே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் கோடையினை எவ்வாறு சமாளிக்கலாம்... குறிப்பாக அந்தத் தருணத்தில் பாதிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் பொதுநல மருத்துவர் புகழேந்தி.

‘‘தமிழகத்தில் கோடை வெயில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற 4 மாதங்களில் மிக அதிகளவில் இருக்கும். இந்தக் காலங்களில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அடர்ந்த நிறம் அல்லது இறுக்கமான உடை அணிவதை தவிர்க்க வேண்டும். காட்டன் துணிகளை பயன்படுத்துவது நல்லது. இந்த அறிவிப்புகள் இருந்தாலும் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடக்கூடிய பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் அந்த நேரத்திலும் உழைக்க வேண்டி உள்ளது.

குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், கனரக வாகனங்களை இயக்குபவர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள் போன்றோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் வெப்பத்தினால் புது வகையான நோய்கள் உருவாகி வருகிறது. பொதுவாக வெயில் காலத்தில் தோல் வியாதி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைதான் பெரிய அளவில் பாதிக்கும். இதனைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் பிரச்னை வெப்பத்தினால் ஏற்படக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக்.

பொதுவாக வெயில் காலங்களில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’கினால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புவி வெப்பமாதல் காரணங்களால்தான் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனல் மின் நிலையங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, காடழிப்பு போன்றவற்றால் அதிகளவில் புவி வெப்பமாகி வருகிறது. இந்த வெப்பமாதலில் பல கிருமிகள் வேகமாக வளரும். அது மாதிரியான ஒன்றுதான் ஹீட் ஸ்ட்ரோக். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

காரணம், இந்த இரு வயதினரால் அதிகமான வெப்பத்தை தாங்க முடியாது. ஆனால் இன்றைய சூழலில், ஹீட் ஸ்ட்ரோக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மட்டுமில்லாமல், வெட்ட வெளிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் தாக்குகிறது. காரணம், அவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் வெயிலில் வேலை செய்கிறார்கள். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் போது நமது தோல் வறட்சியாகும். தொண்டை வறண்டு போகும். மனக்குழப்பம், தலைவலி, அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். கடைசி கட்டமாக மயக்கம் போட்டு விழவும் வாய்ப்புள்ளது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து உடல் முழுவதும் வறண்டு போவதால், சோர்வடைந்து மயக்கம் ஏற்படும்.

சிலருக்கு அதிக வெயில் தாக்கம் காய்ச்சலைக் கூட உண்டாக்கும். குழந்தைகளுக்கு சளி பிடிக்கும். மூளைக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் குறைவாகும். கை, கால்கள் இழுத்துக் கொள்ளும். அதிக வெப்பத்தினால் அம்மை நோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களும் அதிகளவில் வரும். இதைத் தவிர்க்க நாம் உடலில் சேர்க்கும் ஒவ்வொரு உணவும் நீர்ச்சத்துள்ள பொருட்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலே உடல் இயல்பு நிலைக்கு வந்து விடும்.

வெயில் காலத்தில் கிடைக்கும் நீர்ச் சத்துள்ள பழங்களை அதிகளவு உட்கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, முலாம்பழம் போன்ற பழச்சாறுகளை பருகலாம். கம்மங்கூழ், மோர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக தர்பூசணி மிகச் சிறந்த ஒரு பழம். இதில் 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், வாழைப்பழம் சாப்பிடலாம்.

உணவில் அதிகளவு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளதால் அதனை அதிகப்படுத்தும். அதிக காரம் கலந்த உணவுகள், ஜீரணம் ஆவதற்கு கடினமான உணவுகள் மற்றும் அதிக அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை, இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள் கூடவே கூடாது. அசைவ உணவை பொறுத்தவரை மீன் வகை உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. பச்சை காய்கறிகள், சூப் போன்ற உணவுகளை அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.

வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக உச்சி வெயில் நேரத்தில். வெளியே செல்லும்போது உடன் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்த

பட்சம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். லேசான ஆடைகளை உடல் முழுவதும் மூடியவாறு பயன்படுத்தலாம். உடலில் உள்ள வெப்பத்தை தவிர்ப்பதற்கு காலை, மாலை அல்லது இரவு என இரண்டு வேளை குளிக்கலாம். இது உடல் உஷ்ணத்தினை குறைக்க உதவும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

மருத்துவர்: புகழேந்தி

தொகுப்பு: மா.வினோத்குமார்