நன்றி குங்குமம் தோழி
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்பஇருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது. அதி பயங்கரமானது. விரைவில் வரலாம். வந்து மனித குலத்தை அச்சுறுத்தலாம், மக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவாய் மலர்ந்திருப்பவர் கேட் பிங்ஹாம் (Kate Bingham).கொரோனோ வைரஸ் 70 லட்சம் பேரை காவு வாங்கியது என்றால், வரப்போகிற இந்த புதிய வைரஸ் 5 கோடி பேரை காவு வாங்கும். ஆனால் இது எந்த வடிவத்தில் வரும் என்பதை நாம் இன்னும் உறுதியாக அறியவில்லை. ஆனால் இதன் வருகை, உலக சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, வாய்ப்பு மட்டுமல்ல, நிச்சயம் எனவும் அறிவிப்பு செய்திருக்கிறார்.
முன்னரே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் பேர்வழியென இப்படியாக திகில் கிளப்பிய இந்த கேட் பிங்ஹாம் யாருன்னு யோசிக்கிறீங்களா? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயாலஜி முடித்து, மேல் படிப்பாக எம்பிஏ படித்து, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் கால் பதித்த மிகப்பெரும் கோடீஸ்வரப் பெண்மணி.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இங்கிலாந்து நாட்டின் வேக்ஸின் டாஸ்க் போர்ஸ் (UK’s Vaccine Taskforce) தலைவராய் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனுடன்(WHO) இணைந்து கிட்டதட்ட மூன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கி விருதுகள் பல வென்ற பெருமைக்குரியவராக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
இவர் இப்படியாக முன்னறிவிப்பு செய்தவுடன், ஐரோப்பிய ஊடகங்கள் புதிய வைரஸ் குறித்த செய்திகளோடு அலறிக்கொண்டிருக்க, வெளிநாட்டு செய்தி ஏஜென்ஸிகள் வழியாக இந்தச் செய்தி,
இந்திய ஊடகங்களிலும் வெளியானது.மக்களிடம் அச்சத்தை விதைத்து, திரும்பவும் ஒரு வேக்ஸினை உருவாக்கி உலகம் முழுவதும் விற்பதற்காக மருத்துவ மாஃபியாக்களின் சதி திட்டமாக இது இருக்குமோ எனவும் ஊடகங்களில் சிலர் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ? மறுபடியும் லாக்டவுனா என்பதே பலரின் பெருமூச்சாய் இருக்கிறது.
தொகுப்பு: மணிமகள்