சத்தியமங்கலம், ஜூலை 23: பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா வன கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி லாவண்யா (24). இவர்கள் இருவரும் தற்போது பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவிற்கு நேற்று காலை கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி புறப்பட்ட சில நிமிடங்களில் லாவண்யாவிற்கு பனிக்குடம் உடைந்ததால் வலியால் துடித்தார். இதையடுத்து ஒத்தப்பனை மரம் பஸ் ஸ்டாப் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் கோகுல் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் உதவியுடன் வாகனத்திலேயே பிரசவம் பார்த்ததில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயையும் சேயையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.