அருப்புக்கோட்டை, ஜூலை 30: அருப்புக்கோட்டையில் கடன் தொல்லையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தட்சிணாமூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(49). இவரது மனைவி சீதாலட்சுமி(44). ரவி ஆர்டிஸ்ட் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரவி மனைவி சீதாலட்சுமி ஏல சீட்டு நடத்துபவர்களுக்கு தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பணத்தை திரும்பி செலுத்த முடியாமல் அதிக கடன் ஆகிவிட்டதே என சீதாலட்சுமி புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சீதாலட்சுமி கடந்த 27ம் தேதி சொக்கலிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள தனது அம்மா வீட்டில் வைத்து அதிக அளவு மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த சீதாலட்சுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீதாலட்சுமியின் கணவர் ரவி அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்