விருதுநகர், ஆக.22: விருதுநகர் ஊராட்சி ஒன்றியபகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண்களை காப்பதற்காக செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து சின்னமருளுத்து கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் மானிய வீடுகளை ஆய்வு செய்தார்.
மருளுத்து கிராமத்தில் பெற்றோரை இழந்து உறவினர்கள் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் பாதுகாவலர்களை சந்தித்து கலந்துரையாடினார். நடுவப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்தினாளிகள் நலஅலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் தமிழ்நாடு உரிமைகள் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் வீடுதோறும் சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார்.
நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரம் குறித்தும், உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மன்னார் கோட்டை கிராமத்தில் வனத்துறை சார்பில் காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கூண்டினை பார்வையிட்டார். படந்தால் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். ஆய்வில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.