விருதுநகர், நவ. 21: விருதுநகர் என்ஜிஓ காலனியில் வசித்து வருபவர் சுதர்சன் (31). இவர் ஆன்லைன் கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இவருடன் தாய், தந்தை வசித்து வருகின்றனர். கடந்த நவ.17ல் இவரது அக்காவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்து குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்று விட்டனர். இந்நிலையில் நவ.19ல் சுதர்சனின் நண்பர் சதீஷ் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக போனில் தெரிவித்துள்ளார்.
உடனே சுதர்சன், திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5.5 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


