ராஜபாளையம், ஆக.7: ராஜபாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், லிவ்விங்பேட்டை பகுதியை சேர்ந்த ரவி மகன் லிவின்(25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. லிவின் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக கூறி மாணவியுடன் பழகி வந்தார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி, மாணவியிடம் 26 பவுன் தங்கச் சங்கிலியை பெற்றுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மேலும் ரூ.50,000 தேவைப்படுவதாக லிவின் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, ராஜபாளையத்திற்கு நேரில் வந்தால் தருவதாக கூறியுள்ளார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திலும் மாணவி புகார் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசாருடன் மாணவி காத்திருந்தார்.
அப்போது வந்த லிவின், அவர்களை பார்த்த உடனே தப்பி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் கர்நாடகா சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் தங்க நகையை மீட்டனர். மேலும் அவரை கைது செய்து ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.